Thursday 30 August 2012

இரவில் குளிக்குமோ... பேய்? (பாகம்-2)

 Page-2         

     வீடுவந்ததும் மணியைப் பார்த்தேன் சரியாக 12.45. கால்கை கழுவி பசியுடன் சாப்பிட உட்கார்ந்த எனக்கு உணவு பரிமாறியபடியே என் மனைவி, "என்னங்க... இந்த வீட்டில் நமக்கு முன் குடியிருந்தவர் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாராம்; அவர் இறந்தபிறகு ஒரு வருடமாக யாரும் இங்கே குடிவரவில்லையாம்; இரவில் அவ்வப்போது வீட்டிற்குள் விநோதமாக சத்தங்கள் கேட்குமாம்; எதிர்த்தவீட்டு பாட்டி சொன்னார்கள்; பக்கத்தில் அரைப் பர்லாங் தூரத்தில் இடுகாடு ஒன்றும் உள்ளதாம்; அதனால் சீக்கிரமாக வேறு வீடு பாருங்கள்; அதுவரையிலும் இரவு எட்டு மணிக்கு முன்பாக எங்கிருந்தாலும் வீடு திரும்புங்கள்" என்றாள். நான் உடனே "சென்றவாரம் உன்னுடைய கல்லூரி ஆண்டுவிழாப் பேச்சுப் போட்டியில், 'பேய்களும் கடவுளைப் போன்றே மனிதர்களின் மூடநம்பிக்கையே!" என்ற தலைப்பில் உரையாற்றி முதல்பரிசைத் தட்டிக்கொண்டு வந்தாயே! நீயா பிசாசுகள் இருப்பதாக நம்பி இப்படிப் பேசுகிறாய்" என்று தைரியம் ஊட்டினேன்.


          அவளோ, "என்னங்க  செய்வது சிலநேரங்களில் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்டதாக  இருந்தாலும் சில நம்பிக்கைகள் நம்மைவிட்டு விலகவில்லையே. உதாரணத்திற்கு, பைபிளில் மனிதருள் பேதம் காணலாம் என்று சொல்லப்படவில்லையே; நீங்கள் கிருஸ்த்தவர்; ஒரு கிருஷ்தவப்  பெண்ணைக் கல்யாணம் செய்திருக்கலாம்; ஆனால் அப்படிச் செய்யவில்லை; நான் உங்கள் சாதியைச் சார்ந்தவள் என்பதால் என்னைத் திருமணம் செய்து கொண்டீர்கள்; நீங்கள் எனக்குத் தாய்மாமனாக இருக்கலாம்; அப்படியானால் இந்துவாய் இருந்த என்னை உங்க அப்பா கிருஷ்த்தவளாக மாறும்படி செய்திருக்க வேண்டியதில்லையே! கிருஷ்தவ குடும்பங்களில் சாதி பாராமல் இந்துச் சடங்குகளை முற்றுமாக விலகி எத்தனைத் நல்லதுகள் நடக்கின்றன. கிருஷ்த்தவராக இருந்தாலும் ஒரு வகுப்பைச் சார்ந்தவன் இன்னொரு சாதிக்குள் பெண் எடுப்பதோ பெண் கொடுப்பதோ அரிகாத உள்ளதே! சாதிப்பற்றும் வகுப்பு வெறியும் இந்துக்களைப் போலவே கிருஷ்தவரையும் விடவில்லையே!" என்று என்னை சாப்பிட விடாமல் பொறிந்து தள்ளினாள்.


          "அம்மா... தாயே..! நான் தாய்மாமன் என்கின்ற அடிப்படையில் என்னை நீ விரும்பித்தானே கல்யாணம் செய்துகொண்டாய்; நான் எதையோ கேட்க எதையோ குறிப்பிட்டு வழக்கம்போல் வம்புக்கிழுக்கின்றாய்; இனிமேல் உன்னை இராத்திரிகளில் தனியாக விட்டுச் செல்லமாட்டேன்" என்று போலியாக புன்சிரிப்புடன் என் மனைவியை நோக்கிக் கூறியவாறு, செவிக்கான அவளுடைய ஆல் இண்டியா ரேடியோ நேயர் விருப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வயிற்றுக்குள் உணவுக் கவளங்களை அனுப்ப முற்பட்டேன். அப்போது...


          "சல...சல...சலீர்..." யாரோ தண்ணீரை வாரி இறைத்தது போல் சத்தம்; உற்றுக் கேட்டேன்; இறைச்சலானது வீட்டின் பின்புறப் பகுதியிலிருந்து வந்தது. சாப்பிட முற்பட்டதை நிறுத்திவிட்டு வீட்டின் வெளிச் சுற்றுச் சுவர் (compound) பின்புறப்பகுதிக்கான சுவிட்சை 'ஆன்' செய்தேன்; வெளிச்சம் வெளிப்பட்டதும் சத்தம் நின்றது. கதவைத் திறந்து பார்த்தேன்; பின்புறப்பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டதற்கான ஈரமோ வேறு அறிகுறியோ கண்களுக்கு தென்படவில்லை.


         எனக்குப் பின்னே வந்த என் மனைவி, "வெய்யில் காலமல்லவா; ஒருவேளை புழுக்கமாக இருப்பதால் பக்கத்து வீட்டில் யாராவது குளித்திருக்கலாம்" என்று மெதுவாகக் கூறியவள் உடனே நிதானித்து அப்படியிருக்கக் வாய்ப்பு இல்லையே; ஏனென்றால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் இன்று மாலையில்தானே உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்திற்கு செல்வதாகக் கூறிச் சென்றார்கள்; சரிவந்து சாப்பிடுங்கள்; வேறு எங்காவது இருந்து சப்தம் வந்திருக்கலாம்" என்றாள். பின்புறக் கதவைத் தாளிட்டு சுவிட்சை  'ஆப்'  செய்துவிட்டு  சாப்பிட  ஆரம்பித்தேன்.  


          "சல...சல...சல...சலீர்...சலீர்". மீண்டும் சத்தம் கேட்டது; அதைத் தொடர்ந்து மறுபடியும் சுவிட்சை 'ஆன்' செய்துவிட்டு கதவைத் திறக்க சத்தம் நின்றுவிட்டது. தண்ணீர் கொட்டியதற்கான அடையாளமே இல்லை. சுற்றுச் சுவரோடு பதிக்கப்பட்டிருந்த பின்புறக் கதவைத் திறந்து நிலவு வெளிச்சத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் பார்த்தேன்; தூரத்தில் இருந்த பனை மரங்களின் ஓலைகள் காற்று பலமாக வீச, 'பட...பட...பட...' எனற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தன. எங்கோ ஆந்தை ஒன்று தன் குரலால் இரவைப் பயங்கரமாக்கிக் கொண்டிருந்தது. மற்றபடி நரியோ நாயோ கூட அங்கே உலாவுவதாகவோ, வந்து சென்றதாகவோ தெரியவில்லை. எனவே பழையபடி கதவுகளைத் தாளிட்டு சுவிட்சை 'ஆப்' செய்துவிட்டு என்னுடைய சாப்பிடும் கடமையைத் துவங்கினேன்.


          நான் சாப்பிட கையைத் தட்டில் வைத்ததும் மறுபடியும், "சல...சல...சல...சலீர்...சலீர்". பின்புற பகுதியில் தண்ணீரை வாரி இறைக்கின்றது போன்ற பேரிரைச்சல்; இந்தமுறை சத்தம் தெளிவாக் கேட்டது; யாரோ குளிப்பது போல் அல்லவா கேட்கின்றது. இரவில் பேய் குளிக்குமா? அதுவும் தண்ணீர் ஒருசொட்டுக் கூட தரையில் விழாமல்! இப்போது எனக்கு உள்ளூர உதறல் ஏற்பட்டது; என்றாலும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை; என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவளின் முகத்திலும் கலவரத்தின் சாயல் தெரிந்தது. ஆனாலும் நிதானத்துடன், "மணி 1.30 ஆகிவிட்டது; திடீரென்று கரெண்ட் கட் வந்துவிட்டால் என்னசெய்வது; அவசரத்திற்கு ஒரு டார்ச் லைட்கூட நம்மிடம் இல்லையே" என்றாள்.



இரவில் குளிக்குமோ... பேய்? (பாகம்-3)
                     நாளை தொடரும்.




      



< இரவில்… குளிக்குமோ பேய்? (பாகம்-2)

     < சொடுக்கு >

Go Page-1


மேலும் கதைகட்கு >
Labels:






கூடுதலாக:

Classic - படவரிசை தற்காலிக சேமிப்பில் பகிர்
Google+ இல் பகிரப்பட்டது. (இடுகையைக் காணவும்.)



      (Seen above)







No comments:

Post a Comment