Thursday 12 April 2012

சிட்டே சிறகு விரி!

                              சிட்டே சிறகு விரி!

கொட்டும் பனியுள் குதித்துவரும் கங்கையினை
தொட்டும் அலைஒலியில் தூங்காநம் காவிரியை
பட்டுநுரைப் பொங்க பவானிவரக் காண்பதற்கு
சிட்டே சிறகு விரி!

பொங்கலிடு திங்களிது புத்தாண்டில் வாழ்த்துகிறோம்
சென்றுலகம் சுற்றிவந்து எங்களிடம் பொங்குவிழா
எத்தனை வீடுகளில் இல்லையென்று கண்டுசொல்ல
சிட்டே சிறகு விரி!

பற்றிஎரி யும்வயிற்றை பாச முடன்தடவி
சட்டினியைத் தொட்டுதினம் சாதமென்று கூழ்களியை
பிட்டுண்டே நாளும் பிழைப்போர் பசிதீர
சிட்டே சிறகு விரி!

தொட்டுகரம் தாலியிட்டு தூயவளை விட்டுவர
தட்சணையே மஞ்சமாய் தாரவதம் செய்பவனை
கட்டி இழுத்துவந்து காலில் விழச்செய்ய
சிட்டே சிறகு விரி!

Saturday 7 April 2012

இறைவா! பன்றிக்காய்ச்சலை நிறுத்து!


     
அண்டம் படைத்தாயாம்; ஆகாயம் உண்டுபண்ணி,

மண்ணுள் இராப்பகலும்  மாஅகிலம்  வாழகாற்று,

தண்ணீரும், ஆண்டவனே! தந்ததாகச் செப்புகிறார்!

பன்றிநோயைப்  பாரதம்விட்(டு)  ஓட்டு.

Wednesday 4 April 2012

ஓசோனைத் துளைத்திடும் பீடி, சிகரெட் சுவைஞர்களே!




இளம் தளிர்களே!
புகைப் பிடிக்கும்
மயக்கத்தில்...
சல்லடைகளாவது,
உங்களின்
இருதயங்கள் மட்டுமா?

நீங்கள் வெளிவிடும்
கார்பண்டை ஆக்ஸைடுகள்
புவன உயிர்வாயு  -
ஆக்ஸிசனையும், தீய...
பொசுக்குகின்றனவே!

பூமியைக் காத்திடும்
ஓசோன் படலமும்,
வீடுகளில் ஒளிர்ந்திடும்
குண்டு பல்புகளே போல்
வெப்பமய மாகின்றதே!

ஓசோனைத் துளைத்திடும்
கரியமிள வாயுக்களின்
சகோதர பீடிப் பிரியர்களே!
சிகரெட் சுவைஞர்களே!

நாட்டின் பொருளாதாரத்தை
பட்டாசு கொளுத்துவதுபோல்
நெருப்பிட்டு,
புகைய வைத்து,
சாம்பள்... ஆக்குகிறீர்களே!

காற்று மாசுபட
ஏனைய
பூமி உயிர்கட்கும்,
கொள்ளி...
நீங்கள் வைக்கலாமோ?









புகையிலைக் காதலர்களே!
உயிர்கள் யாவும்
கடவுளின்
               படைப்பென்கின்றீர்!

அவனே படைத்ததாய்
சொல்லும்
உங்களின் உடம்புகளை
 நீங்களே...
கெடுத்துச் சிதைப்பதும்
பாவம் இல்லையா?

புகைத்திடா மாந்தரையும்
மரிக்கச் செய்யும் அதிகாரம்
உங்களுக்குத்
தந்தவன் எவன்?

பக்கத்தில் இருப்பவனையும்
பன்றிக் காய்ச்சல்
வந்துற்றது போல்...
இருமிடச் செய்கிறீர்களே!

புகைப்பதை உடன்
நிறுத்திடுங்கள்!
உங்களின் சுவாசப்புகைக்
கரியமிள வாயுவை
உள்ளிழுக்காமல்...

உம் சொந்தங்களும்,
சுற்றங்களும்...
தம் கொள்ளுப் பேரன்களை,
சிரிக்கும் எள்ளுக் குமரிகளை;
கொஞ்சி... பின், மரிக்கட்டும்!

உங்களின் வாழ்நாளும்
நம் முன்னோர் போல்,
வயது...
நூறுகளைத் தாண்டிடட்டும்!
                        ***


Monday 2 April 2012

பெண் என்பவள்...!


கருவாகி, உருவாகி, காலத்தில், சிசுவாகி;
மெருகாகி, மெருகாகி, மகரந்த மலராகி ;
பருவத்தில் கனியாகி, பாயாகி, தாயாகி;
உருகிக் கிழமாகி, ஓர்நாளில் மறைகின்றவள்!

Sunday 1 April 2012

தமிழை அறிவோம்...!

                                மகரந்தச் சேர்க்கை    

   மலர்களுக்குள் மகரந்தச் சேர்க்கைகள் ஏற்படுவதற்கு முன்னர் என்னவெல்லாம் நிகழ்கின்றன?   அந்நிகழ்வுகட்கு காரணமான வண்டு என்ன செய்கின்றது?

     தேர்வு செய்திட்ட பூவை முகர்கின்றது. தேனை அருந்துகின்றது, அவ்வாறே வேரொரு மலரையும் சேருகின்றது. (அதாவது மற்ற மலர்களு டனும் சேர்க்கை நிகழ்கின்றது).

           ஆக முகர்தல் + அருந்துதல் + சேருதல் - இம்மூன்று நிகழ்வுகளும் ஒருங்கிணைந்து, முகர் + அருந்து + சேரல் அல்லது சேர்க்கை - ஆயிற்று. 'முகர்' பின்னர் 'மகர்' ஆக, 'மகர் + அருந்தச் + சேர்க்கை என்றானது. அது மெல்லத் திரிந்து காலப்போக்கில் "மகரந்தச் சேர்க்கை" ஆயிற்று.-